நாச்சியார் திருமொழி / வாரணமாயிரம்


நாச்சியார் திருமொழி / வாரணமாயிரம்

(ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை தோழிக்குக் கூதல்)

மாப்பிள்ளை அழைப்பு 

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து, 

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும், 

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

நிச்சயதார்தம் 

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு, 

பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர் 

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

பெரியோர்களின் அனுமதி 

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,

வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

காப்பு கட்டுதல்

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,

பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,

காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

பிடி சுற்றுதல் 

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,

சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,

மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் 

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

பாணி க்ரஹணம் 

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,

முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் 

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!

ஸப்தபதி 

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,

காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,

தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்!

அம்மி மிதித்தல் 

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மை உடையவன் நாராயணன் நம்பி,

செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!

பொறி இடுதல் 

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி,

அரிமுகன்  அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,

பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

மஞ்சள் நீர் தெளித்தல்

குங்குமம்  அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,

மங்கல வீதி வலம் செய்து மணநீர்,

அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,

மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

பாராயண பலன்

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,

வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!